search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் குவிப்பு"

    • அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.
    • டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் 4 மாவட்ட மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட மக்களை வெள்ள பாதிப்பு பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களை சூழ்ந்து உள்ள வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாத நிலையில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் 5-வது நாளாக தவித்து வருகிறார்கள்.

    இப்படி வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் போலீஸ் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் 3500-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    தென் மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 4 போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்கு தேவையான உதவிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்ட போலீசாருடன் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி உள்ள பல கிராமங்களில் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் மக்களை சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    அதுபோன்ற கிராமங்களுக்கு டிராக்டர்களில் சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை போலீசாரும் மீட்பு படையினரும் வழங்கி வருகிறார்கள்.

    • மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் மக்களை சந்தித்து குறைகளை கேட்கும் நவகேரள சதஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக சில இடங்களில் இளைஞர் காங்கிரசார் மற்றும் கேரள மாணவர் சங்கத்தினர் கருப்புக் கொடி காட்டினர்.

    அப்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. மாநில தலைமைச் செயலகம் மற்றும் 564 போலீஸ் நிலையங்களை நோக்கி பேரணியும் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் தலைமை செயலகம் நோக்கி சென்ற பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் மற்றும் செருப்புகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பேரணியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பேரணியில் சென்றவர்கள் தடையை மீறி முன்னேறி செல்ல முயன்றனர்.


    இதனால் போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க பேரணியில் பங்கேற்றவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. இதனால் பேரணியில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர். அந்த பகுதி கலவர பகுதி போல் காணப்பட பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி பேரணியில் பங்கேற்றவர்கள் கூறுகையில், போலீசார் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். காங்கிரஸ் மாநில துணை தலைவர் அரிதாபாபு உள்ளிட்ட பெண் தலைவர்களின் உடைகள் மற்றும் தலைமுடியை பிடித்து இழுத்தனர். இதனால் தான் அங்கு பிரச்சினை உருவானது என்றனர். மேலும் போலீசாரின் தாக்குதலால், கட்சியினர் சிலர் மயக்கம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து இளைஞர் காங்கிரசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் அமைப்பினர் சிலரை போலீசார் பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.

    தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சதீசன், நவகேரள சதஸ் நிகழ்ச்சியின் போது மாவட்டம் தோறும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.


    அவரது பேச்சுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசுக்கும், அதன் வெளிப்படை திட்டத்துக்கும் எதிராக சதீசன், வன்முறையை தூண்டி விட்டு அமைதியை குலைக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

    இந்த நிலையில் பேரணியின் போது, போலீசாரை தாக்கியதற்காகவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காகவும் சதீசன் மீது, ஜாமீனில் வெளிவர முடியாக சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள சதீசன், தன் மீதான குற்றச்சாட்டுகளால் பயந்து விட்டேன் என முதல்-மந்திரியிடம் சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

    • மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.
    • வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் கோழி திருடியதாக கடந்த மாதம் 21-ம் தேதி 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தாக்கி சிறுவலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பிடிப்பட்ட 2 பேரையும் அவதூறாக பேசி தாக்கியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதை கண்டித்தும் வழக்கை நீக்க கூறியும் இன்று (வியாழக்கிழமை) கோபி செட்டிபாளையம் ஒரு தனியார் கல்யாண மண்டபம் முதல் பஸ் நிலையம் வரை அனைத்து சமுதாய பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் சார்பில் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோபி உட்கோட்ட எல்லை பகுதியில் இன்று ஊர்வலம், பேரணி, ஆர்ப்பாட்டம் நட த்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

    அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீ சார் அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக கோபிசெட்டி பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோபி பஸ் நிலையம், பெரியார் சிலை, டவுன் பகுதி, மார்க்கெட் பகுதி, வழிபாட்டுத்தலங்கள், முக்கிய வீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பார்வையிட்டார்.

    மக்கள் கூட்டமாக சென்றால் அவர்களிடம் விசாரணை நடத்தி ஒழுங்கு படுத்தி வருகின்றனர். வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு கோபிசெட்டிபாளையம் பகுதிக்குள் அனுமதிக்கின்றனர். இதனால் இன்று கோபிசெட்டிபாளையம் பகுதி பரபரப்பாக காட்சியளித்து வருகிறது.

    • சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
    • பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்கிறார்கள். இதனால் சென்னையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவை பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக நேற்று 1365 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 1895 சிறப்பு பஸ்களும், நாளை கூடுதலாக 1,415 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் கோயம்பேடு, தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முதல் பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

    எனவே பயணிகளின் பாதுகாப்புக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 300 போலீசார் 2 ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயணிகள் வைத்திருக்கும் உடைமைகள் மற்றும் பைகளை தீவிரமாக சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள். கோயம்பேடு பஸ் நிலைய வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் சோதனையும் மேற்கொண்டனர். இந்நிலையில் கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் டிரோன் கேமராவை பறக்க விட்டும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்றும், நாளையும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    • வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
    • பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து வீடுகள், வாகனங்களுக்கு தீ வைப்பு, வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல், விவசாய பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே மீண்டும் ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம் (வயது 56), நல்லசிவம் (62), புலவர் சுப்பிரமணி, வக்கீல் சுப்பிரமணி (68) ஆகியோரது தோட்டத்தில் இருந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வெட்டி சாய்த்தனர்.

    மேலும் வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் அந்த பகுதிகளில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையிலான போலீசார் வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டப்பட்ட தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோதலில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார்.
    • தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் பாரதியார் பல்கலைக் கூடம் இயங்கி வருகிறது. இங்கு இசை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த பல்கலைக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த பல்கலைக்கூடத்தில் துறை வாரியாக முதல்வர் முதல் மாணவர்கள் வரை பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொறுப்பு முதல்வராக இருந்த போஸ் மாற்றப்பட்டார்.

    அதன்பிறகும் பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் காரைக்காலை சேர்ந்த ஒரு மாணவர் தாக்கப்பட்டார். முகம் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் காயமடைந்த அவரை சக மாணவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவலறிந்த அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாணவர்களிடையே நடந்த மோதலால் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவி வருகிறது. மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அருப்புக்கோட்டை அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • பெண்கள் உள்பட 94 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொட ர்பாக இருதரப்பி னரிடையே பிரச்சினை நீடித்து வருகிறது.

    இது தொடர்பாக அவர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படுவதால் கிராமத்தில் அமைதியின்மை நிலவுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன், தனது மனைவியுடன் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். கோவில் அருகே வந்தபோது அங்கு நின்றிருந்த ஒரு தரப்பினர் ஜெயராமனை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

    இதனை அவர் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் இருதரப்பை சேர்ந்தவர்கள் அங்கு வந்த மோதலில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பாண்டி(வயது36), மருதன்(59), ஆதிலட்சுமி(54) உள்பட 8 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் எதிர் தரப்பை சேர்ந்த கதிரேசன், கருப்பசாமி, மனோஜ் உள்பட 14 பேர் மீது அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த கருப்பசாமி கொடுத்த புகாரின்பேரில் ராமலட்சுமி, முருகன், அபிஷேக், மருதன், வேல்முருகன், ராஜ்குமார் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பினர் மோதலால் ஆத்திப்பட்டியில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    • முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
    • அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    திருத்தணி:

    பள்ளிப்பட்டு அடுத்த விஜயமாம்பாபுரம் பகுதியை சேர்ந்த முதியவர் நரசிம்மலு நாயுடு. கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அவரது உடலை அப்பகு தியில் உள்ள விவசாய நிலத்தில் உறவினர்கள் புதைத்தனர்.

    இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாய நிலத்தில் புதைக்கப்பட்ட முதியவர் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து 130 நாட்களுக்கு பிறகு விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டு இருந்த முதியவர் நரசிம்மலு நாயுடுவின் உடல் வருவாய்த்துறையினர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தோண்டி எடுக்கப்பட்ட முதியவர் உடல் பின்னர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த கும்பல் ஒலிபெருக்கி வைக்கவிடாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
    • பதட்டம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உண்ணாமலை கடையில் பெரும்புழி ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு வருடாந்திர மண்டல அபிஷேகம் மற்றும் கொடை விழா நடந்தது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென ஆலயத்தில் புகுந்து திருவிழா நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர்கள் ஆலய நிர்வாகி களுக்கு மிரட்டல் விடுத்த தால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்து முன்னணி மாநில நிர்வாகி மிசா சோமன் தலைமையில், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட இணை செயலாளர் சுபாஷ் குமார், பூசாரிகள் பேரமைப்பு மாவட்ட செயலாளர் சசிகுமார், உண்ணாமலை கடை துணை தலைவர் விஜய குமார் உட்பட ஏராளமான இந்து அமைப்பினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரப ரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து மார்த்தாண் டம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலையை தடுக்க அதிரடி படையினரும் குவிக்கப்பட்டனர். ஆனால் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த கும்பல் ஒலிபெருக்கி வைக்கவிடாமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென இந்து அமைப்பினர் காவல்துறையினருக்கு புகார் அனுப்பினர். இதையடுத்து போலீசார், தகராறில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அந்த கும்பல் கலைந்து சென்றது. அதன் பின்னர் அங்கு திருவிழா அமைதியான முறையில் நடந்தது.

    தொடர்ந்து அங்கு பதட்டம் ஏற்படாமல் இருக்க அதிரடிப்படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

    • பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார்.
    • ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுக்கா கரப்பாளையம் பகுதியில் பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அன்று முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவைப்பு சம்பவங்கள், வன்முறை நடைபெற்று வந்தது.

    இதன் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    ஜேடர்பாளையம் அருகே உள்ள பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் சவுந்தர்ராஜன் (55). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூர் பகுதியில் உள்ளது. இதில் 3 ஏக்கர் நிலத்தில் பாக்கு மரங்களையும், மீதியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் தென்னை பயிர் செய்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சவுந்தரராஜனின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த தங்கமுத்து சென்றுள்ளார். அப்போது சவுந்தரராஜன் நிலத்தில் பயிர் செய்திருந்த பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.

    தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 1800 பாக்கு மரங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளதை பார்த்த சவுந்தர்ராஜன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கோவை மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆகியோர் சவுந்தரராஜன் தோட்டத்திற்கு சென்று மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட பாக்கு மரங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எஸ்.பி. ராஜேஷ்கண்ணா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் தனித்தனி குழுவாக ஆனங்கூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் உள்ளவர்கள் பெயர்கள், அவர்களுடைய செல்போன் எண்களைப் பெற்றும், பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் இந்த பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

    • இளைஞர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
    • அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வேட்டவலம்:

    திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 250-க்கும் மேற்பட்ட பொது பிரிவினரும், 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு பொதுப்பிரிவினர் மட்டும் வழிபாடு செய்வார்கள். அதேபோல் பட்டியலின மக்கள் வழிப்பாடு செய்ய அவர்களுக்கென தனியாக காளியம்மன் கோவிலும் உள்ளது.

    இந்நிலையில் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என சிலர் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

    இதற்கு பொது பிரிவினர் சமூக வலைத்தளம் மூலமாகவே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இளைஞர்கள் மாறி, மாறி தங்கள் கருத்துகளை பதிவிட்டதால், இருத்தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று இருத்தரப்பினரும் நேரில் சந்தித்தனர். அப்போது இளைஞர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிராமத்தில் நேற்று முதல் பதட்டமான சூழல் நிலவியது. தகவல் அறிந்த சப்-கலெக்டர் மந்தாயினி மற்றும் போலீசார் செல்லங்குப்பம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்கு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சம்பவம் தொடர்பாக இருத்தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.

    • மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.
    • கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவ கிராமத்தினருக்குள் மோதல் ஏற்பட்ட காரணத்தினால் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் நேற்று கடலூர் நீதிமன்றத்தில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் இடையே பெரும் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரின் நேற்று முன்தினம் முதல் கடலூர் தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், தாழங்குடா, கடலூர் துறைமுகம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் போலீசாருக்கும், மீனவர்களுக்கும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பதட்ட நிலை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீனவ கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மீனவர் கிராம பகுதிகளில் பொதுமக்கள் கும்பலாக கூடுவதற்கு போலீசார் அனுமதி அளிக்காமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆற்று கரையோரம் மற்றும் துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுளுக்கு போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×